வ.விஷ்ணு
எழுத்து பேதிகள்
சிறுபான்மையினராய் இருத்தல்
தேசப்பற்று கேள்விக்குள்ளாக்கப்படும் சிறுபான்மையினர் அடையும் மன உளைச்சலைப் போல் உலகத்தில் வேறு இருக்க முடியாது. அது பெரும் சித்திரவதை. யார் யாரோ செய்யும் குற்றங்களுக்காகத் தங்களின் தேசப்பற்றை நிரூபிக்கும் நிர்பந்தம் அவர்களுக்கு உண்டு. இந்தியாவில் பெரும்பான்மை மதமான இந்து மதத்தின் பெயரால் பசுவதைத் தடுப்பு என்ற போர்வையில் சக மனிதன் என்றும் பாராமல் அடித்துக் கொல்கிறார்கள். தொலைக்காட்சியில் அந்த செய்தியைப் பார்த்துவிட்டு எந்த சலனமும் இல்லாமல் நம்மால் அடுத்த நிமிடமே நம்முடைய மத நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். ஏனென்றால் பெரும்பான்மை சமூகத்தைப் பொறுத்தவரை இந்த பசுக்காவலர்கள் 'fringe elements'. அங்கும் இங்கும் நடப்பதை வைத்து இந்த மதமே அப்படித்தான் என்று முடிவு கட்டக்கூடாது என்று மவுனம் சாதிக்கும் அந்தப் பெரும்பான்மை சமூகம். அதைவிடக் கொடுமை, சக இந்தியக் குடிமகனைக் கொன்ற அவர்களது தேசப்பற்று கேள்விக்குள்ளாக்கப்படாது, மாறாக தூக்கிக் கூடப் பிடிக்கப்படும். இதுவே ஒரு இஸ்லாமியர் தீவிரவாத செயலில் ஈடுபட்டுவிட்டால் நாட்டின் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் அது பெரும் நெருக்கடியாய் இருக்கும்; அந்தத் தீவிரவாதிக்கு எதிராகக் கண்டனங்களைத் தெரிவித்து ‘நாங்கள் இந்தியர்கள்’ என்று கூக்குரலிட்டாகவேண்டிய கட்டாயத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள். இதெல்லாம் ஒரு விஷயமா, ஏன் செய்யக்கூடாது என்று கேட்டால், நாம் சிறுபான்மையினராக இருந்து பார்க்கவில்லை என்றே பதிலளிக்க முடியும். அந்தத் தீவிரவாதி தன்னுடைய மதத்தை சேர்ந்தவனாக இருந்துவிட்டான் என்ற ஒரே காரணத்திற்காக அவனைப் பொது வெளியில் ஒரு இஸ்லாமியனாக எதிர்த்தே ஆகவேண்டும், அதன் மூலமாக நானும் இந்தியன்தான் என்று சந்தேகக் கண்களுக்கு இடையே ஒவ்வொரு முறையும் நிரூபித்து நிரூபித்து வாழ வேண்டும் என்ற நிலைமையை, அந்த அச்ச உணர்வை, நம்மால் அப்படிப்பட்ட ஒரு சிறுபான்மையினராக இருந்து பார்த்தால்தான் உணர முடியும். சிறுபான்மை சமூகத்திற்குப் பாதுகாப்பு உணர்வை அளிப்பதுதான் ஒரு நாகரீக சமூகத்தின் அடையாளம். அந்தப் பாதுகாப்பு உணர்வின் அடித்தளத்தோடுதான் பெரும்பான்மை சமூகம் ஆதிக்கம் செலுத்தும் அரசியல், சமூக, பண்பாட்டு வெளிகளில் அவர்களால் நம்பிக்கையுடன் இரண்டரக் கலக்க முடியும். அதில் நாம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. - 02.05.17
பெண்ணிய ஆண்களுக்கு
பல்வேறு அடையாளங்களுக்கு உட்பட்டு, நமக்குப் பிடிக்காத அடையாளங்களால் முத்திரை குத்தப்பட்டுதான் நாம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். அவை ஆதிக்க அடையாளங்களாக இருப்பின், அவற்றைக் கேள்விக்குள்ளாக்கினால்தான் பொதுச் சமூகத்தின் கவனத்தைப் பெற முடியும். ஒருவரிடம் சென்று, “ஆணாதிக்கம் என்பது ஆண் பெண் வித்தியாசமின்றி மனிதர்களுக்குள் பீடித்திருக்கும் நோய்”, என்று பேசினால், அதை அவர் ஏற்றுக்கொண்டால், “ஆமப்பா என்ன செய்வது, நம் சமூகம் அப்படி, வளர்ப்பு அப்படி”, என்று தாக்கமே இல்லாமல் கடந்துவிடுவார். அதுவே “ஆண்கள் மிகவும் மோசம், பெண்களை நாம் இவ்வாறு நடத்தக்கூடாது”, என்று சொன்னால்தான் அவர் முதலில் பிரச்னையை கவனிக்கவே செய்வார். ஏன்? அதை சொன்ன நாம் முதலில் ஒரு ஆண். பல சலுகைகளை வழங்கும் ‘ஆண்’ என்னும் அடையாளத்தை இங்கு பெண்களுக்காக துறக்க நினைக்கிறானே, என்ற எண்ணம்தான் பொதுச் சமூகத்திடம் வெறுப்புக்கு இடையே நடத்தப்போகும் உரையாடலுக்கான அடித்தளம். அதே புள்ளியில்தான் பாதுகாப்பின்மை உணர்வால் ஒன்றுபட்ட பெண் சமூகம் ‘இவனை நம்பலாம்’ என்று முடிவு செய்து நம்மைப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறது. நாம்தான் ஆணாக இருந்தாலும், ஆண்கள் மோசம் என்றதற்குக் கோபப்படவில்லையே? காந்தியின் பின்னால் பெண்கள் அணிவகுத்தது அப்படித்தான். காந்தி கொல்லப்பட்டதும் அப்படித்தான், வேறொரு தளத்தில். பிரச்னையின் வேர் ஆண் என்னும் உயிரியல் அடையாளம் அல்ல, ஆண் என்னும் ஆதிக்க அடையாளம். அதை இவன் நேர்மையாகத் துறந்துவிட்டு வருகிறானா என்பதையே பெண் சமூகம் நம்மிடம் எதிர்பார்க்கிறது.
இப்படி இருப்பின் நம் நிலைப்பாடு பொதுச் சமூகத்திற்கு எதிராகத்தான் இருக்கும், அதில் வியப்பேதும் இல்லை, அது இயல்பு. பொதுச் சமூகம் ஆதிக்க நிலைப்பாடுகளால் ஊறியது. இருக்கும் நிலையிலிருந்து தன்னை பாதிக்கும் மாற்றத்தை அது கோராது, விரும்பவும் செய்யாது. அதனால்தான் ஆதிக்க அடையாளத்தைக் கேள்வி கேட்கும் நபர்களை அது வெறுக்கவும் செய்கிறது. பெரியார் மீதும் அம்பேத்கர் மீதும் இல்லாத வெறுப்பா? ஆனால் அதே அடையாளத் துறப்பின் மூலம் பொதுச் சமூகத்தை நம்மால் எதிர்கொள்ளவும் முடியும். எப்படி? முன்பே சொன்னதுதான். பெண்ணியத்தைப் பெண்கள் பேசும்போது ‘நீங்க மட்டும் எப்படியாம்’ என்று கேட்கும் பொதுச் சமூகம், அதையே ஆண்கள் பேசும்போது ‘அவங்க மட்டும் எப்படியாம்’, என்று கேட்கிறது. நம்மை ஆதிக்க ஆணாக அடையாளப்படுத்திய சமூகம் ‘இவன் ஏன் அவர்களுக்காகப் பேசுகிறான்’ என்று சிந்திக்கும் கணத்தில், குழப்பமடைகிறது. அந்தக் குழப்பத்தில் நாம் கவனம் பெறுகிறோம், நம் பக்கம் பலம் பெறுகிறது. அந்தக் கணத்திலிருந்து இந்த சமூகத்திடம் வசைகளையும் அடிகளையும் அவதூறுகளையும் வாங்க நாம் தயாராக இருக்க வேண்டும். என்ன செய்வது, நம்முடைய பணி அப்படிப்பட்டது.
- 22.04.17
இப்படி இருப்பின் நம் நிலைப்பாடு பொதுச் சமூகத்திற்கு எதிராகத்தான் இருக்கும், அதில் வியப்பேதும் இல்லை, அது இயல்பு. பொதுச் சமூகம் ஆதிக்க நிலைப்பாடுகளால் ஊறியது. இருக்கும் நிலையிலிருந்து தன்னை பாதிக்கும் மாற்றத்தை அது கோராது, விரும்பவும் செய்யாது. அதனால்தான் ஆதிக்க அடையாளத்தைக் கேள்வி கேட்கும் நபர்களை அது வெறுக்கவும் செய்கிறது. பெரியார் மீதும் அம்பேத்கர் மீதும் இல்லாத வெறுப்பா? ஆனால் அதே அடையாளத் துறப்பின் மூலம் பொதுச் சமூகத்தை நம்மால் எதிர்கொள்ளவும் முடியும். எப்படி? முன்பே சொன்னதுதான். பெண்ணியத்தைப் பெண்கள் பேசும்போது ‘நீங்க மட்டும் எப்படியாம்’ என்று கேட்கும் பொதுச் சமூகம், அதையே ஆண்கள் பேசும்போது ‘அவங்க மட்டும் எப்படியாம்’, என்று கேட்கிறது. நம்மை ஆதிக்க ஆணாக அடையாளப்படுத்திய சமூகம் ‘இவன் ஏன் அவர்களுக்காகப் பேசுகிறான்’ என்று சிந்திக்கும் கணத்தில், குழப்பமடைகிறது. அந்தக் குழப்பத்தில் நாம் கவனம் பெறுகிறோம், நம் பக்கம் பலம் பெறுகிறது. அந்தக் கணத்திலிருந்து இந்த சமூகத்திடம் வசைகளையும் அடிகளையும் அவதூறுகளையும் வாங்க நாம் தயாராக இருக்க வேண்டும். என்ன செய்வது, நம்முடைய பணி அப்படிப்பட்டது.
- 22.04.17
Westworld
நான் நினைத்தபடி இவ்வுலகம் இருக்காது என்று உணர்வதே ஞானம். அந்த ஞானம் கொடுக்கும் வலியின் விளைவே நம் சுயம். அந்த வலியை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதே நம் வாழ்க்கை. இவ்வளவுதான். மற்றபடி கடவுளின் குரல் மேலிருந்து வருவதில்லை, நம்முள்ளிருந்து வருவது. நமக்கு மட்டும் கேட்கும் அக்குரல் உண்மையில் கடவுளுடையது அல்ல என்று உணரும் கணத்தில் நாம் முழுமையாக விடுதலையடைகிறோம். - Westworld - 29.03.17
காலப் பிரயாணி
காந்தியை இரண்டு மணிநேரங்கள் வாசித்துவிட்டு உச்சி வெயிலில், உன்மத்த நிலையில், தத்துவ விசாரணைகள் செய்துகொண்டே நடந்து செல்லும் அந்தத் தருணங்கள். பிரதான சாலையின் ஓரமாக, வாகனங்களின் இரைச்சலுக்கு மத்தியில், எதை நோக்கியும் ஓடாத ஒரு பைத்தியக்காரனாக அறியப்படும் அந்த நொடிகள். சுற்றியுள்ள இயந்திரச் சத்தங்களாலும் பிழைத்தல்களாலும் அவசரங்களாலும் சிறிதும் பாதிக்கப்படாமல், அந்த நதியோடு ஒட்டியும் விடாமல் விலகியும் ஓடாமல், அதன் ஓரத்திலேயே தள்ளாடியபடித் தத்தும் ஒரு குடிகாரனாக வாழும் கணங்கள். தான் இந்தக் காலத்தைச் சேராத, இந்த ஓட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு காலப் பிரயாணி என்ற உணர்வினால் எழும் அந்த போதை. நமக்குள் இருக்கும் நார்சிசவாதிக்கு இதைவிடச் சிறந்த உணவு வேறில்லை. - 27.03.17
தனி ஒருவன்
எந்தக் கருத்தாக்கத்தோடும் சாராமல், தனக்கென்று ஒரு தனித்த அரசியலை ஏற்படுத்தி, சக மக்களிடம் இருக்கும் குறைகளைப் பெரிதுபடுத்தி, அனைத்து கருத்தாங்களிலும் உள்ள நிறை குறைகளின் இருப்பை அங்கீகரித்து, குறைகளைக் காட்டமாக விமர்சித்து அனைத்து கருத்தாக்க மக்களையும் பகைத்துக்கொண்டு, அனைத்தும் சமம் என்ற பெயரில் அனைத்தையும் சமமாகக் கேள்விக்குள்ளாக்கி, தன் சத்தியமும் தன் அறிவும் தனக்கு நியாயமாகவும் நடுநிலையாவும் இருக்கிறது என்பதோடு மனநிறைவு அடைந்து, எந்த இயக்கத்திற்கும் கருத்து ரீதியாயப் பயன்படாமல், தன் அதீத அறிவை வீணடித்து, ஒரு கடவுளைப் போல் பார்வையாளராகவே இருப்பதன் பெயர் நடுநிலை இல்லை. - 16.03.17
ஜல்லிக்கட்டுத் தடை
இந்தியாவில் அரசியல் மாற்றம், பொருளாதார மாற்றம் எல்லாவற்றையும் மேலிருந்து நடைமுறைப்படுத்தலாம். ஆனால் மக்களைப் பகைத்துக்கொண்டு பண்பாட்டு மாற்றத்தை நடத்திவிட முடியாது. இந்திய வரலாறு முழுக்க இதற்கான சான்றுகள் இருக்கின்றன. சிப்பாய்ப் புரட்சிக்கு உடனடிக் காரணம் பண்பாட்டில் கைவைத்ததுதான். மொழியடையாளத்திற்கு ஆபத்து வந்ததால்தான் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. இன்று ஜல்லிக்கட்டின் சாதக பாதகங்கள் எதையும் ஆராயாமல் ஒற்றைப்படையாக மிருக வதை என்று தடை செய்தால் எதிர்ப்பு கிளம்பத்தான் செய்யும். “நான் பத்து வருடங்களாக என் மாடுகளோடு இருக்கிறேன், மிருக வதை பற்றி நீ ஒன்றும் எனக்கு சொல்லத் தேவையில்லை”, என்ற வாதம்தான் மக்களிடையே வெல்லும். அதே நேரத்தில் ஒரு சர்வதேச அமைப்பை தடை செய்வதும் சரியானது அல்ல. மிருக உரிமைகள் குறித்த பண்பாட்டு மாற்றமும் உரையாடலும் இயக்கமும் கீழிருந்து நிகழ பீட்டா போன்ற அரசு சாரா அமைப்புகள் நிச்சயம் தேவை. இங்கு அனைத்துக் குரல்களையும் இணைத்துக்கொண்டுதான் இயங்க வேண்டியிருக்கிறது. - 19.01.17
Democracy
The problem with aristocracy is the tendency to assume the position of a shepherd and look down upon the common public as herds. It eliminates the mutual intellectual respect and cause for dialogue in the first level itself. It polarises intellectuals and common man against the fact that both of them are influenced by the social values, and assumes a higher moral ground by conjuring an illusion of immunity from emotions and prejudices. Its main weakness is expectations, which results in a downward spiral of cynicism and despair when things doesn't move in the desired way.
A successful democracy tries to accommodate everyone's interests by considering moral relativism. The developmental graph need not always be positive. Nothing wrong of it being a sine wave. The progress will be slow and there will be occasional regression, but that's the point of Democracy. We all have a scale of what's better, we talk, and we arrive at a compromise, which will ultimately be better or worse, depending on the side which we are in, but it saves the day by not being ideally best, because another day, it can be disastrously worst. - 13.01.17
A successful democracy tries to accommodate everyone's interests by considering moral relativism. The developmental graph need not always be positive. Nothing wrong of it being a sine wave. The progress will be slow and there will be occasional regression, but that's the point of Democracy. We all have a scale of what's better, we talk, and we arrive at a compromise, which will ultimately be better or worse, depending on the side which we are in, but it saves the day by not being ideally best, because another day, it can be disastrously worst. - 13.01.17